கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசை

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும், புதுச்சேரி இந்திரா…

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 31 குழந்தைகள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு அதிகமான கொரோனா பரவுகிறதா என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “ஏற்கனவே குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டது போலவேதான் தற்போதும் பாதிப்பு உள்ளது. குழந்தைகளுக்கான வார்டுகள், ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிப்பு இல்லாத வகையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர். உயிரிழப்பு போன்றவை இல்லாத வகையில் அனைத்து பாதுகாப்பு சிகிச்சை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது. ஒருவேளை 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டால் அதனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்ற ஆளுநர், புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய கொடி ஏற்றும் போது, கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.