பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் கைது!

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபால் போக்சோ சட்டத்தின் கீழ் 14 நாட்கள் நீதிமன்ற காவலில்…

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபால் போக்சோ சட்டத்தின் கீழ் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ராஜகோபால், மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் விவாதப் பொருளானது. இந்நிலையில் இதுகுறித்து, போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்த ஆசிரியர் ராஜகோபால் வீட்டிற்குச் சென்ற தனிப்படை போலீசார் அவர் பயன்படுத்திய லேப்டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர், ராஜகோபால், அவரது மனைவி மற்றும் அவரது தாயார் ஆகியோரை வடபழனி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் ஆசிரியர் ராஜகோபாலை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆசிரியர் ராஜகோபாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.