மதுரையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துவரும் வேலையில் நோய் தொற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் சபரி நகர் பகுதியில் ஆதரவற்றோர்களுக்கான தனியார் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 6 வயதிற்குட்பட்ட 27 சிறுமிகள் மற்றும் 8 பணியாளர்கள் உள்ளனர்.
பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 சிறுமிகள் உட்பட மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து மாவட்ட சுகாதார துறையினரால் காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டது.




