கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.
காவல்துறை கொடுத்துள்ள விளக்கத்தில், p-5 கொடுங்கையூர் காவல் நிலைய எல்லையில் சமீபத்தில் ஒரு வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் திருடு போனது தொடர்பான வழக்கிலும், 2020-ஆம் ஆண்டு, கொடுங்கையூர் பகுதியில் பத்மாவதி என்பவரின் வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் திருடியது தொடர்பான வழக்கிலும், செங்குன்றம், அலமாதியைச் சேர்ந்த குற்றப் பின்னணி நபர் ராஜசேகர் (எ) அப்பு சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும், அதன்பேரில், P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில், நேற்று ராஜசேகர் (எ) அப்பு, மணலி பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று காலை மணலி பகுதிக்குச் சென்று அங்குப் பதுங்கியிருந்த ராஜசேகர் (எ) அப்புவை கைது செய்து, கொடுங்கையூர் எவரெடி காலனியில் உள்ள கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணையில் ராஜசேகர், மேற்படி குற்றச் சம்பவங்களிலும் திருடியதை ஒப்புக் கொண்டதுடன், மேற்படி திருடிய தங்க நகைகளை செங்குன்றம், காந்தி நகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர் சங்கர் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்ததாகவும், ராஜசேகர், சோழவரம் காவல் நிலைய திருட்டு வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது சோழவரம், சென்னை மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் 1 கொலை முயற்சி. கன்னக்களவு வழக்குகள் மற்றும் திருட்டு வழக்குகள் என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது என காவல்துறை கூறியுள்ளது.
தொடர்ந்து தங்க நகைகளை மீட்பதற்காக ராஜசேகரை செங்குன்றம் அழைத்துச் செல்ல தயாரான நிலையில், ராஜசேகர் வாந்தி வருவதாகவும், உடல்நிலை சரியில்லை என்றும் கூறியதன் பேரில், காவல் குழுவினர் ராஜசேகரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாகவும், சிறிது நேரம் கழித்து மீண்டும் ராஜசேகருக்கு வாந்தி வருவதாகவும், உடல்நிலை சோர்வாக இருப்பதாகவும் கூறியதன் பேரில், அருகிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர், நாடித்துடிப்பு குறைவாக உள்ளதாகவும், உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதின் பேரில், ராஜசேகரைச் சென்னை. ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராஜசேகர் இறந்துவிட்டதாகத் தெரிவித்ததாக அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து. காவல் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு. காவல் உயரதிகாரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டதாகவும், இது தொடர்பாக, P-6 கொடுங்கையூர் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, செம்பியம் சரக உதவி ஆணையாளர் செம்போடு பாபு அவர்கள் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற நடுவர் (Magistrate) அவர்களுக்குத் தகவல் தெரிவித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறை,
அண்மைச் செய்தி: ‘அதிர்ச்சி! தமிழ்நாட்டில் மேலும் ஒரு விசாரணை கைதி மரணம்’
விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ராஜசேகர் (எ) அப்பு திடீரென உடல்நிலை பாதிப்படைந்து இறந்ததால், P-6 கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர் (5.11.20308), மணிவண்ணன் (த.கா.51901) மற்றும் முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி (மு.நி.கா.48397) ஆகியோர் நேற்று (12.06.2022) இரவு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என குறிப்பிடப்படுள்ளட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள் மேற்படி வழக்கின் விசாரணையைக் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு (CBCID) மாற்றி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை கொடுத்துள்ள விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








