குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இதனால், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் யாருக்கு தங்களது ஆதரவு என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் பாமக வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அன்புமணி ராமதாஸை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராகிய திரௌபதி முர்முவை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு பாமக ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“திரௌபதி முர்மு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஆவார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பல தடைகளை முறியடித்து பொதுவாழ்வில் முன்னேறியவர். ஜார்க்கண்ட் ஆளுநராக 6 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு” என்று குறிப்பிட்டுள்ள பாமக தலைமைக் கழகம்,
“திரௌபதி முர்மு அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும்போது அந்தப் பதவியை அலங்கரிக்கும் முதலாவது பழங்குடியினராகவும், 2வது பெண்மணியாகவும் இருப்பார். பழங்குடியினர் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பது அந்த இனத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பதாலும், செய்யப்படும் பெருமை என்பதாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாமக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் திரௌபதி முர்முவை ஆதரிப்பது என்று பாமக உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.