பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை அம்பலப்படுத்திய பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ரேவண்ணாவின் மகன். கடந்த 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், இவர் ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார்.
இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ‘டிப்ளோமேடிக்’ பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவரை சர்வதேச அளவில் ‘இன்டர்போல்'(Interpol) போலீசார் தேடிவருகிறார்கள்.
இதையும் படியுங்கள் : ஐநாவின் நிரந்தர உறுப்பினரானது பாலஸ்தீனம் – இந்தியா ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!
இதனிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக சேர்ந்த தேவராஜ் கவுடாவை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து சித்ரதுர்கா சென்ற தேவராஜ் கவுடாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
சொத்து ஒன்றை விற்க உதவி செய்வதாக கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக 36-வயது பெண் அளித்த புகாரில் தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை கசிய விட்டதாக தேவராஜ் கவுடா மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.








