”வெற்றிக் கோப்பைக்கு பூஜை; ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும்” – அண்ணாமலை பேட்டி!

சிஎஸ்கே அணியின் வெற்றிக் கோப்பை பெருமாள் கோயிலில் வைத்து பூஜை போடப்பட்டது என்றும், ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில்…

சிஎஸ்கே அணியின் வெற்றிக் கோப்பை பெருமாள் கோயிலில் வைத்து பூஜை போடப்பட்டது என்றும், ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

”டெல்லியில் போராடும் விளையாட்டு வீராங்கனைகளின் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும்போதே கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்றால், வேறு யாரை நம்புவார்கள் என தெரியவில்லை. கவிஞர் வைரமுத்து மீது 19 புகார்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரு புகாரில் கூட வழக்குப்பதிவு செய்யவில்லை. கவிஞர் வைரமுத்துக்கு ஒரு நியாயம், விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒரு நியாயமா?

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் தமிழகத்திற்கு ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். அமைச்சர் பி.டி.ஆர்-ன் ஆடியோ உண்மையானது. அதற்காக அவரை துறை மாற்றம் செய்தது ஏற்புடையது அல்ல. அமைச்சருக்கே இந்த நிலைமை என்றால் திராவிட மாடல் ஆட்சியில் யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். குறைபாடுகளை சரி செய்து மீண்டும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். வரும் ஜூலை 9-ம் தேதி பாஜகவின் சார்பில் ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்க உள்ளது. இந்த நடைபயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

சிஎஸ்கே அணியின் வெற்றிக் கோப்பை பெருமாள் கோயிலில் வைத்து பூஜை போடப்பட்டது. ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழகத்தில் நல்லது நடக்கும்”. இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.