திண்டிவனத்தில் வாடகைக்கு எடுத்த கார்களை விற்பனை செய்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டவனம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் காரை, வாடகைக்கு விட்டு வந்துள்ளார். ரமேஷின் சித்தப்பாவின் நண்பர் ராஜசேகர் என்பவர், கடந்த 14ம் தேதி அவரை தொடர்பு கொண்டு, தனது மனைவி பிரசவ வலியில் துடிப்பதாகவும், அதனால் அவரை புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தனக்கு கார் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். அவசர தேவை என்பதால் ரமேஷும் உடனடியாக அவருக்கு காரை வழங்கி உள்ளார். அடுத்த நாள் கார் குறித்து ராஜசேகரிடம் கேட்டப்போது, பேருந்து வசதி இல்லாததால் தனக்கு 4 நாட்களுக்கு கார் தேவைப்படுவதாக அவர் கூறியதாக தெரிகிறது. பின்னர் 4 நாட்களுக்கு பின்பும் காரை ஒப்படைக்காததால், இதுகுறித்து மீண்டும் கேட்டப்போது, ராஜசேகர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து 18ம் தேதி ரோசனை காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராஜசேகர் கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. ராஜசேகர் தலைமறைவான நிலையில், அவருடன் இணைந்து மோசடியாக கார் விற்பனையில் ஈடுபட்டு வந்த ராஜா, பிரபு, பழனி, ஆனந்த், சரண்ராஜ், ஸ்ரீதர் ஆகியேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷின் கார் உட்பட 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.