கொரோனா தடுப்பூசி காரணமாக யாருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
தடுப்பூசி போட்டுக் கொள்வதால், திருமணமான ஆண், பெண் ஆகியோருக்கு மத்தியில் மலட்டுத் தன்மை ஏற்படும் என்றும், பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சில ஊடகங்களில் வெளியான செய்திகளில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போடப்படும் எந்த ஒரு கொரோனா தடுப்பூசி காரணமாகவும் மலட்டு தன்மை ஏற்படாது.
தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் முன்பே விலங்குகள், மனிதர்களிடம் முறையாக பரிசோதிக்கப்பட்டது. மலட்டு தன்மை போன்ற விளைவுகள் ஏற்படாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று தடுப்பூசி தொடர்பான சரியான தகவல்கள், விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கு மத்திய பத்திரிகை தகவல் தொடர்பு துறையின் டிவிட்டர் தளத்தில் FACT CHECK பக்கத்தை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.”
இவ்வாறு மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







