தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை கடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி அருள்மணி என்பவரின் மனைவி மாலினிக்கு, கடந்த 19ம் தேதி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆனால் திடீரென்று கடந்த 20-ம் தேதி மருத்துவமனையிலிருந்து மாலினியின் குழந்தை மாயமானது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, ஒரு பெண்ணும், ஆணும் குழந்தையை கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தையை கடத்திய பிடமனேரி பகுதியை சேர்ந்த ஜான்பாஷா மற்றும் அவரது மனைவி தஞ்சையா என்பவர்களை கைது செய்து குழந்தையை மீட்டனர். கடத்தலுக்கு உதவிய தஞ்சையாவின் தாய் மற்றும் பாட்டி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்த தஞ்சையாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. தஞ்சையா அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் இருந்த மாலினியின் குழந்தையை அவர் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







