நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கையை, திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து திமுக தரப்பிலான தகவல்கள் அறிக்கை யாக வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார். ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் பேரில் நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு நல்ல முடிவை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுக அரசின் நிலைப்பாடு என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.







