வடசென்னையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில், ரவுடிகள் நடவடிக்கையை கண்காணித்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும் படி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வடசென்னையில் கல்வெட்டு ரவி, காக்கா தோப்பு பாலாஜி உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரவுடியான நெப்போலியன் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் தலைமறைவாக இருந்தபடி பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் பதுங்கியிருந்த ரவுடி நெப்போலியனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நெப்போலியனின் கூட்டாளியான சரத்குமாரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.







