தமிழக ஆளுநரை திரும்பப்பெற கோரி குடியரசு தலைவரிடம் மனு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 2021ல் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட உடனேயே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் ஒரே கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்ப திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அந்த மனுவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.