அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, அவர் பிறந்த ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் இல்லம் வரை திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்தும், பெரியார் திடலில் காவல்துறையினரைக் குவித்தும் அடக்குமுறையைக் கையாண்ட தவெக அரசு, தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கும் அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் எனப் பல்வேறு கொள்கைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது சொந்த மண்ணிலேயே அவரது கொள்கைகளை வலியுறுத்தி நடத்தப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், பெரியாரை அரசியலுக்காக மட்டுமே தவெக தனது கொள்கைத் தலைவராக முன்வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விழிப்புணர்வு பேரணிக்கு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
எனவே, பெரியாரை கொள்கைத் தலைவராக முன்மொழிந்திருக்கும் தவெக, அவரையும் அவரது பெயரையும் வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் நாடகத்தைக் கைவிட்டு, பெரியாரின் பிறந்தநாளன்று திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு உடனடியாக அனுமதி வழங்கி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்று இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




