இலங்கையை போன்று தமிழ்நாட்டிலும் மக்கள் புரட்சி வெடிக்கும் – இபிஎஸ் குற்றச்சாட்டு

இலங்கையில் அதிபர் இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி சென்ற நிலைமை தான் தமிழ்நாட்டில் திமுகவிற்கு வரும் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக இடைக்கால…

இலங்கையில் அதிபர் இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி சென்ற நிலைமை தான் தமிழ்நாட்டில் திமுகவிற்கு வரும் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவிற்கு தலைவர் ஒருவர் தான் என்றார். ஆனால் அதிமுகவிற்கு தொண்டர்கள் அனைவரும் தலைவர்கள் தான் என கூறினார்.

 

கருணாநிதியால் கூட அதிமுகவை அழிக்க முடியவில்லை என்ற அவர், எம்ஜிஆர் இறந்த பிறகு ஜெயலலிதா அதிமுகவை பல மடங்கு உயர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய 3-வது கட்சியாக மாற்றி காட்டினார் என தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியால், அதிபராக இருக்கும் போதே இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலைமை, தமிழ்நாட்டில் திமுகவிற்கு வரும் என்றும், மக்கள் புரட்சி தமிழ்நாட்டிலும் வெடிக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

காற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியாதோ அது போல் தான் அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின்போது, மும்முனை மின்சாரம், 24 மணி நேரமும் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது, மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என மக்களால் சொல்ல முடியவில்லை என்றார்.

 

வீட்டு வரி 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் மற்றும் வீட்டு வரி சொத்து வரி ஆகியவை உயர்ந்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது ஏமாற்றி விட்டனர் என்றார். தற்போது தாய்மார்கள் அந்த பணம் எங்கே என்று கேட்டால் அதற்கு பல காரணங்களை சொல்லி ஏமாற்றி வருகின்றனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.