தமிழகத்தில் பாஜக தலையெடுக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனீஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூரில் துளிர்விட்டு அல்ல வேர் விட்டு வரலாறு படைத்தது. கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க காலத்தில் அவர்கள் அனுபவித்தது கொஞ்சம் அல்ல. தூக்குமேடையை இவர்கள் அலங்கரித்தார்கள். பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கி குண்டுகளுக்கும், தூக்கு கயிறுகளுக்கும் அஞ்சாமல் இருந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். நல்லக்கண்ணு அவர்கள் வீரம் நிறைந்தவர். எதற்கும் அஞ்சாதவர். அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பாணவர். உயிர்பலிக்கு அஞ்சாமல் நல்லக்கண்ணு அவர்கள் போராடி கட்சியை வளர்த்தார்கள்
காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு இப்பொழுது வந்த அரசு சனாதன அரசாக, இந்துத்துவாவை திணிக்கின்ற அரசாக உள்ளது. ஒரே மொழி ஒரே நாடு என்பதை திணிக்கிறது. ஒரே நாடாக அமைந்தால் சோவியத் யூனியன் போல பிரிந்து போகும் சூழல் ஏற்படும். அனைத்து மதம் மற்றும் மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்டத்தை நாம் கையில் எடுக்க தேவையில்லை. மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் மோடி அரசு அம்பானி மற்றும் அதானி போன்றவர்களுக்காக ஆட்சி நடத்துகின்றனர்.
திருப்பூரில் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதி என்பது சனாதன சக்திகளை ஒரே மொழி என்று கூறுபவர்களை முறியடிக்க எடுத்துக் கொள்ளும் உறுதியாகும். திமுக மீதான தோள் கொடுக்கும் தோழமை தொடர்ந்து வளரும். பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும். தோழமைக் கட்சிகள் ஒன்றாக இணைந்து எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் இந்த ஒற்றுமையை பலப்படுத்தினால் தமிழகத்தில் பாஜக தலை எடுக்க முடியாது.
நமக்கு கடமை இப்பொழுதுதான் ஆரம்பிக்கிறது .தமிழகத்தில் பாஜக தலைகாட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆலயங்கள் பற்றி அவர்கள் பேசுகின்றனர். நாம் ஆலயங்களுக்கு விரோதிகள் அல்ல. அதே நேரம் பகுத்தறிவு கருத்துகளைப் பேசுபவர்கள் அந்த பகுத்தறிவு கருத்துகளைக் கூற வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா








