நிதி நிறுவனங்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: அரசு நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

தனியார் நிதி நிறுவனங்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…

தனியார் நிதி நிறுவனங்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரித் தாக்குதல் போன்றவை ஏற்படுத்திய மிகப்பெரும் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே கொரோனா பொதுமுடக்கம் ஏற்படுத்திய பெருந்தாக்கம் பல குடும்பங்களை வாழ்வாதாரமின்றி நிலைகுலைய வைத்துவிட்டது. இதன் காரணமாக, தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கவும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், கடன் செயலிகள் வாயிலாக அதிக வட்டிக்கு கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நேரங்களில் அவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுகளும் சமீபகாலமாக அதிகரித்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

தற்போது அப்பட்டியலில், கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே கடன் தொல்லையால் சகோதரி ஜெயந்தி என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. குள்ளஞ்சாவடி அருகே உள்ள அனுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயந்தி. டீ கடை நடத்தி வரும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் ஈக்வட்டாஸ் என்ற தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். இதற்கான மாத தவணைத் தொகை சரியாக கட்டி வந்த நிலையில், பொருளாதார சூழ்நிலை காரணமாக கடைசி 2 மாத தவணைத் தொகையை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்தொகையை செலுத்த ஜெயந்தி அவகாசம் கேட்டுள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த ஈக்வட்டாஸ் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள், ஜெயந்தியின் வீட்டிற்கு வந்ததோடு, அவரது வீட்டில் அமர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக ஆபாச வார்த்தைகளால் ஜெயந்தியை பேசியுள்ளனர். மேலும், மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த ஜெயந்தி, தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் தனியார் நிதி நிறுவனங்கள், கடன் செயலிகளால் அரங்கேறிய உயிரிழப்பு நிகழ்வுகளின் அடிப்படையில், தனியார் நிதி நிறுவனங்களை, கடன் செயலிகளை முற்றாக முடக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ சென்று கடன் கேட்டால், உடனடியாக கிடைப்பதில்லை. இதற்கு காரணம், கடனை திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளதா என நிறைய சோதனைகள் செய்தே அவர்கள் கடன் வழங்குகிறார்கள். இதனால், எழை, எளிய மக்கள் தனியாரிடத்தில் கடனுக்காக கையேந்துகிறார்கள்.

தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் செயலிகள் செயல்படுவதே சட்டவிரோதமானது. ஆனாலும், அரசுக்குத் தெரிந்தே இணையவழியில் அவை விளம்பரங்கள் வெளியிட்டு சுதந்திரமாக செயல்பட்டு கொண்டுள்ளன. எனவே, ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, இந்த தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும். கடன் செயலிகள் எங்கும் தரவிறக்கம் செய்ய முடியாதபடி இணைய சேவை வழங்குநர் வழியே முடக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மேலும், சகோதரி ஜெயந்தி உயிரிழப்புக்கு காரணமான நிதி நிறுவனமான ஈக்வட்டாஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அந்நிதி நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஆபாசமாக பேசிய ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். உயிரை மாய்த்துக் கொண்ட ஜெயந்தியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக, அரசு மற்றும் ஈக்வட்டாஸ் நிதி நிறுவனத்தின் தரப்பில் இருந்து 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். உயிரை மாய்த்துக் கொண்ட சகோதரி ஜெயந்திக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.