“ஆணவ பேச்சுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

2026 ஆண்டில் முதலமைச்சர் அறிவாலயத்தில் இருந்து தான் வருவார் என சொல்வது ஜனநாயகத்தின் ஆணவப் பேச்சு என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வருகிற 1ம் தேதி முதல் 4 ம் தேதி முதல் மதுரையில் உள்ள 10 தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக மதுரை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடிதம் வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், இதுவரை 110 தொகுதிகளில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த எழுச்சி பயணத்தில் தங்கள் வீட்டுப் பிள்ளையை போல மக்கள் வரவேற்று வருவதை மதுரை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து உளளார்கள். இனி நேரடியாக அவரை வரவேற்க தயாராகி விட்டனர்.

மதுரையில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம் ஒரு திருப்புமுனையாக அமையும், எழுச்சி பயணம் என்ற வைர கிரீடத்தில் முத்திரை பதித்தது போல மதுரை மாவட்டத்தில் அமையும். மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர்கள் என அனைத்து தர மக்களும் வரவேற்பு அளிக்க உள்ளார்கள். ஒவ்வொரு தொகுதிலும் ஒரு லட்சம் வாக்காளர்கள் திரள உள்ளனர் இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் வருகின்ற வாகனங்களுக்கும் தேவையான இட வசதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடியார் செய்துள்ளார், மதுரைக்கு 40 ஆண்டுகள் குடிநீர் பஞ்சம் வராத வகையில் 1,292 கோடி அளவில் குடிநீர் திட்டத்தை புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவில் தொடங்கி வைத்தார் இந்த திட்டம் மதுரைக்கு வரப்பிரசாதமாகும் . அதேபோல ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் திட்ட பணிகள், குடிமராமத் திட்டம், 30 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், மதுரை ராஜபாளையம் அருகே நான்கு வழி சாலைகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் மதுரையின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடியார் செய்து கொடுத்தார்.

ஆனால் இன்றைக்கு மதுரை மாநகராட்சி ஊழலால் தலை குனிந்து நிற்கிறது, இதே மதுரை மாநகராட்சிக்கு 2011 ஆம் ஆண்டில் 250 கோடி நிதியை அம்மா வழங்கினார், அதிமுக ஆட்சியில் திட்டங்களால் மதுரை
மாநகராட்சி சிங்கப்பூர் போல உருவாகி இருக்கும், தற்போது திமுக ஆட்சி எதையும் செய்யவில்லை. இதெல்லாம் எடப்பாடியார் தோலுரித்து நிச்சயம் காண்பிப்பார். இன்றைக்கு அறிவாலயத்தில் இதுதான் 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக வருவார் என்று உதயநிதியை முன்னிறுத்தி கூறி வருகிறார்கள்.

தமிழகத்தில் இது போன்ற ஆணவ பேச்சுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். குடும்ப ஆட்சி என்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாகும், ஜன ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ளவர்கள் இது போல் சொல்ல மாட்டார்கள், 2026 தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக கையெழுத்து இடுவார், இப்போது நாங்கள் உறுதியிட்டு கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.