பென்சில் பிரச்சனை – 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு…சக மாணவன் காவல்நிலையத்தில் சரண்!

பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் போலீசில் சரணடைந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான்.

இதனை தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் வெட்டு காயம்பட்ட மாணவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சக மாணவனை வெட்டிய 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் இருந்து அரிவாளை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் உதவி ஆணையாளர் சுரேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசியவர், “பென்சில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ஆசிரியை மற்றும் மாணவர் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் நேரடியாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். புத்தகப் பையில்தான் அரிவாள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் மாணவனின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் இரண்டு மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் சம்பவம் இந்த நடைபெற்ற நிலையில் மற்ற மாணவர்களும் நலமுடன் உள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பள்ளி வகுப்பறைகளில் சுழற்சி முறையில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் பள்ளியில் சோதனை நடத்தப்பட்டுள்ளது ஆனால் எதிர்பாராதவிதமாக புத்தக பையில் இருந்து அரிவாள் கண்டறியப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.