வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கட்சிகளை வற்புறுத்த முடியாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்காக என்னென்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். தேர்தல் வாக்குறுதிகளே வாக்காளர்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு அரசியல் கட்சி வெற்றிபெற்ற பின், படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றன. எனினும், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலும் ஒரு அரசுக்கு ஏற்படும்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயக்ராஜ் பகுதியை சேர்ந்த நபர் ரேஷ்மான் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாஜக மீது வழக்கு தொடர்ந்தார். அதில், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். தேர்தலின்போது வாக்காளர்களை கவரும் விதமாக பல வாக்குறுதிகளை தந்துவிட்டு, அவற்றை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், பாஜக மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது. தேர்தலின்போது கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கட்சிகளை வற்புறுத்த முடியாது. இதற்காக அரசியல் சட்டத்தில் எந்த ஒரு தனி பிரிவும் இல்லை என்று தெரிவித்தது.







