தமிழ்நாடு சட்டசபையில், இன்று வேளாண் பட்ஜெட்டை, அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2022-2023ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நேற்று நடைபெற்றது. இதனைத் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காலை 10 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் அறிவிப்பில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாகத் தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நடத்தியதால், விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும், பாசன வாய்க்கால்களைத் தூர்வார அதிக நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும், காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் மற்றும் விவசாயிகள் விளைப்பொருட்களை சந்தைப்படுத்தும் முறையை எளிமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.







