நாடாளுமன்ற தாக்குதல் முறியடிக்கப்பட்டபோது வீர மரணமடைந்த வீரர்களின் தியாகத்திற்கு, மரியாதை செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 தீவிரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த சம்பவத்தில், பாதுகாப்படை வீரர்கள் 9 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தின் 20-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த 2001-ஆம் ஆண்டு இதே நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின், நாடாளுமன்ற வளாகத்திற்குள் கொடூரமான பயங்கரவாத நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களின் உன்னத தியாகத்திற்கு தேசம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார். அவர்களது தேசத்திற்கான சேவையும், உச்சபட்ச தியாகமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற கட்டத்தின் தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளர். கடமையின் போது அவர்களின் துணிச்சலுக்கும் மிக உயர்ந்த தியாகத்திற்கும் தேசம் நன்றியுடன் இருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.