36 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டம் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் லட்சக்கணக்காண பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இந்த ஆண்டு கடந்த மார்ச் 20ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து இரவு கோயிலில் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : ”தோனி அடிச்ச 2 சிக்ஸ் தான் ஜெயிச்சதுக்கு காரணம்….” – சிஎஸ்கே வெற்றி குறித்து ரசிகர்கள் பேட்டி

நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும், இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அச்சமயம் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

தெப்பக்குளம் சென்ற அம்மன் சப்பரம் சரியாக 3.15 மணி முதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் வந்து சேர்ந்தபின், குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. சரியாக 3.45 மணி முதல் 4 மணிக்குள் பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதில் முதியவர் ஒருவர் திடீரென தீயில் விழுந்தார். அவரை தியணைப்புத் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ள பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் இறங்கும் பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தனர்.

நாளை மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 6ம் தேதி மஞ்சள் நீராடுதலும், 7ம் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்கத்தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 10ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading