வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி- 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானின் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே,மூன்று டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் விளையாடப்பட இருக்கிறது. பாகிஸ்தான் வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி கராச்சியில் நேற்றிரவு நடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஹூசைன் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறி ஷாக் கொடுத்தார் பாபர் அசாம். அடுத்து களமிறங்கிய பஹர் ஜமான் 10 ரன்னில் ஷெபர்ட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதனால் அந்த அணி 4.5 ஓவர்களில் 35 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு வந்த ஹைதர் அலியும் தொடக்க ஆட்டக்கார் ரிஸ்வானும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். ரிஸ்வான் 52 பந்துகளில் 78 ரன்களும் ஹைதர் அலி 39 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய முகமது நவாஸ் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
பின்னர், 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை.
இதனால் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 4 விக்கெட்டும், சுழற்பந்துவீச்சாளர் ஷதாப் கான் 3 விக்கெட்டும் சாய்த்தனர். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 போட்டி இன்று நடக்கிறது.