தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால், உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் தொடர்கிறது. இந்தநிலையில், வருகிற 15-ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவடையுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதிகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும், சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடர்வதாகவும்,
ஜனவரி 3-ஆம் தேதி முதல் 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து செய்யப்படுவதாகவும், வழக்கம்போல் அவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும், அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.








