உசிலம்பட்டி அருகே கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகும் முன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்மணிகளை எடை போட்டு மூட்டை போடப்பட்டுள்ள சூழலில் நெல்மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரிகள் வர காலதாமப்படுத்துவதால் நெல் மூட்டைகள் திறந்த வெளியிலேயே உரிய பாதுகாப்பின்றி தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் வரை விவசாயிகளே தங்களது தார்பாய்கள் மூலம் பாதுகாக்க வேண்டும் எனவும், எடுத்து சென்ற பின்னரே நெல்லுக்கான தொகை வரவு வைக்கப்படும் என கூறுவதால் தேக்கமடைந்துள்ள நெல்மூட்டைகளை விரைந்து எடுத்து செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து இன்று காலை முதலே உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு, சிறு சிறு சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த மழை அதிகரித்தால் உரிய பாதுகாப்பின்றி பள்ளமான பகுதியில் அமைந்துள்ள கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.