புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனத்தில் 55 மாத ஊதியம் வழங்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வயிற்றில் ஈரத்துணி அணிந்து பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அரசின் பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். இரண்டாம் நாளான இன்று வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொண்டு நூதன முறை போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 55
மாதமாகச் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், தீபாவளி பஜார் மானியத்தொகை 65 லட்சத்தை வழங்க வேண்டும், பாப்ஸ்கோ ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டிய 6 ஆண்டு வாடகை ரூ.1 கோடியே 30 லட்சம் மற்றும் அரிசி விநியோகம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் விலையை வழங்க வேண்டும்.
பொங்கல் பொருட்கள் வழங்கியதற்கு கமிஷன் தொகை ரூ.31 லட்சமும், பணி ஓய்வுக் பெற்ற தொழிலாளர்களுக்குத் தடையில்லா சான்றிதழ் வழங்கி, ஓய்வு காலப் பண பலன்களை அளிக்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்ஸ்கோ மதுபானக் கடைகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வயிற்றில் ஈரத் துணியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மாநில அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.







