ஈகுவடார் நாட்டின் சிறைச்சாலையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
ஈகுவடார் நாட்டின் உள்ள துறைமுக நகரான கயாகுயில் (Guayaquil) சிறைச்சாலையில் கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறைவான பாதுகாப்பு அதிகாரிகள் காரணமாக, இங்கு அடிக்கடி கோஷ்டி மோதல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.
இதில் 6 கைதிகள் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் மோதலில் ஈடுபட்டதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவலறிந்ததும் கைதிகளில் உறவினர்கள் சிறைச் சாலையின் வெளியே கூடினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் இந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நூறாக அதிகரித்துள்ளது. 52-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
கலவர தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சிறைச்சாலைக்கு வந்ததை அடுத்து கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. போதைபொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதாகக் கூறப்படுகிறது.









