மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்று, ரவுடிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவுபடுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனுவை அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ளபிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது, அதனை விரைவில் சீரமைக்க வேண்டும் மேலும் பாதாள சாக்கடை நீர் குடிநீரில் கலப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள், அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு கூறினார்.







