திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்று 2 நாட்களிலிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தார். அதன்பின் தொற்று பரவலை கட்டுப்படுத்த அவர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றார். அத்துடன் எதிர்க்கட்சியினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தஞ்சாவூர், தருமபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
ராமநாதபுரம் அமமுக மாவட்டச்செயலாளர் ஆனந்த், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நடராஜன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, முத்துசாமி, சக்கரபாணி மற்றும் திமுக துணை அமைப்புச்செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








