கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற 17 வயது மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் மற்றும் போராட்டங்களால் பல சர்ச்சைகளை கிளப்பியது. மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது தாயார் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகின்றது.
மாணவி ஸ்ரீமதி இறந்து ஓராண்டு ஆகிய நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூரில் அவரது குடும்பத்தினர் நினைவு மணிமண்டபம் அமைத்துள்ளனர். ஸ்ரீமதியின் நினைவு நாளை முன்னிட்டு, வலிகளைத் தாங்கி உறங்குகிறாள், உறவுகள் இருந்தும் என்ற வாசகதத்துடன் இடம் பெற்றுள்ள இந்த மணிமண்டபம் குடும்பத்தினரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நினைவு மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர்.
- பி.ஜேம்ஸ் லிசா








