ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகிய நிலையில், பலருக்கும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஜமைக்காவில் இருந்து வந்த குஜராத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் அவசர கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். அதில், ஏற்கனவே மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும், விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டைச் பொறுத்தவரை டிசம்பர் 3ம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் புதிதாக 23,764 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய சுகாதாரத்துறை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.