ஓமலூர் : பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பள்ளி ஆய்வு கூடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஜலகண்டாபுரம் காவல் நிலைய…

ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பள்ளி ஆய்வு கூடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஜலகண்டாபுரம் காவல் நிலைய எல்லையில்
சவுரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சவுரியூர் சுற்று
வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று
வருகின்றனர். இந்த பள்ளியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை
சேர்ந்த 42 வயதான சரவணகுமார் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் பள்ளி மாணவர்களை விட மாணவிகளிடமே பேசி நெருக்கம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒரு சில மாணவிகளை மட்டும் அவ்வப்போது தனியாக
அழைத்து பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் 9-ம்
வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை அடிக்கடி தனியாக அழைத்து தொல்லை கொடுத்து
வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று மாணவியை அழைத்த ஆசிரியர் சரவணகுமார், பள்ளியில் உள்ள ஹைடெக் ஆய்வு கூடத்தில் வேலை கொடுத்து செய்யுமாறு கூறியுள்ளார்.

மாணவி ஆய்வு கூடத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது உள்ளே சென்ற கணித ஆசிரியர் சரவணகுமார், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில்
அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து கணித ஆசிரியர் சரவணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆசிரியர், போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, தன்னை பொய் வழக்கில் கைது செய்து விட்டதாக முழக்கமிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர் சரவணகுமாரை, போலீசார் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அரசு பள்ளி ஆசிரியர் தன்னிடம் பயிலும் மாணவியிடமே தகாத முறையில் நடந்து கொண்டு கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.