பழைய பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டிடம் அமைப்பதற்காக குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி, அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடங்கள் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சமீபகாலமாக பல பள்ளிக்கூடங்களின் மேற்கூரை மற்றும் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
குறிப்பாக, மதுரை கொடிமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. எனவே, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, அதில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வித்துறை சார்பில், பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.







