தடுப்பணைகளை அரசு சும்மா கட்டுவதில்லை, புதிதாகக் கட்டப்பட உள்ள தடுப்பணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படப் போவதில்லை, தண்ணீர் தேக்கி வைக்கப்படப் போகிறது எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த சண்முகநாதபண்டியன் உட்படச் சிலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிடையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மஞ்சளாறு அணை 1968-ல் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாய பாசனத்திற்காகக் கட்டப்பட்டது. மஞ்சளாறு கொடைக்கானல் மலையில் உற்பத்தியாகிறது, அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 5259 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. மஞ்சளாறு அணை முதல் ஆலங்குளம் வரை 9 அணைக்கட்டுகள் மற்றும் 7 குளங்கள் உள்ளது. பொதுப்பணித் துறையினர் பல்வேறு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக அரசாணை பிறப்பித்தனர்.
அதில், மஞ்சளாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளைக் கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தடுப்பணை கட்டுவதற்கு தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மஞ்சளாறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதால் பழைய ஆயக்கட்டு தாரர்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஆகவே, மஞ்சள் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மஞ்சள் ஆறு 27 கிலோ மீட்டர் பயணம் செய்து வைகை ஆற்றுடன் இணைகிறது. ஆற்றின் நடுவே பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிதண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கட்டப்பட உள்ள 3 தடுப்பணைகளும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக மட்டுமே வேறு எந்த காரணமும் கிடையாது. தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் தடுப்பணை கட்டப்பட உள்ளது இது அரசின் கொள்கை முடிவு இந்த தடுப்பணைகள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக மட்டுமே.
மதுரை வைகை ஆற்றில் தடுப்பணைகள் கட்டியதால் தான் மதுரை தெப்பக்குளம் மற்றும் வண்டியூர் கண்மாயில் தண்ணீர் குறையாமல் இருந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தடுப்பணைகளை அரசு சும்மா கட்டுவதில்லை, புதிதாகக் கட்டப்பட உள்ள தடுப்பணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படப் போவதில்லை, தண்ணீர் தேக்கி வைக்கப்படப் போகிறது. எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.








