அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு திருப்பித் தருவது வெறும் 29 பைசா மட்டும் தான் எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு விழாவையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார். அங்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் மேடையில் கமல்ஹாசன் பேசியதாவது,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“இந்த 7 ஆண்டுகள் எப்படி கடந்தது என தெரியவில்லை என சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு கணமும் எனக்கு புரிந்தது, தெரிந்தது. நேர்மையும், உத்வேகமும் தான் என்பது எனக்கு தெரிந்தது. நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல, சோகத்தில் அரசியலுக்கு வந்தவன். என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள். என்னை போக வைப்பது அதை விட கஷ்டம். முழு நேர குடிமகனாக இல்லாமல் ஓட்டு கூட போடாதவர்கள் என்னை முழு நேர அரசியல் வாதியா என கேட்காதீர்கள். முழு நேர குடிமகன்கள் கூட யாரும் இல்லை, 40% பேர் வாக்களிப்பதில்லை. 90 ஆயிரம் பேர் ஓட்டு போடாததால் தான் நான் கோவையில் தோற்றேன்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும். அரசியலை விட்டு என்னைப் போக வைக்க முடியாது. எனது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. இனி அழுத்தமாக நடைபோடுவோம். அனைவருக்கும் 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் வேலை, 4 மணி நேரம் குடும்பத்தில் இருந்தாக வேண்டும். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை, முழு நேர அப்பனும் இல்லை. பிள்ளையும் இல்லை. சொந்த காசில் கட்சி நடத்தி வருகிறேன். உங்கள் அன்புக்கு கைமாறு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.
நான் ஏன் சினிமாவில் நடிக்கிறேன் என சொல்கிறேன். எனக்கு எல்லா வசதிகள் நீங்கள் கொடுத்தும் நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என கேட்டால், உங்கள் அன்புக்கு இன்னும் கைம்மாறு செய்யவில்லை என அர்த்தம். ஏன் முழு நேர அரசியலில் வரவில்லை என கேட்பவர்களுக்கு, அரசியலில் நான் செய்வது எல்லாம் நான் சம்பாதித்த பணத்தில் செய்தது.
டெல்லியில் விவசாயிகள் போராடுவதை தடுக்க ஆணிப் படுக்கை போட்டு இருக்கிறார்கள். எதிரி படையை நடத்துவது போல் விவசாயிகளை நடத்துகிறது மத்திய அரசு. படையெடுத்து வரும் எதிரிகளுக்கு என்ன வரவேற்பு கொடுப்பார்களோ அது டெல்லியில் நடக்கிறது. விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு செய்த 10% கூட மத்திய அரசு செய்யவில்லை.
தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என மத்தியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயில் 29 பைசா தான் நமக்கு திரும்பி வருகிறது. எஞ்சிய வாழ்நாளை கொடுப்பது சுலபமல்ல. இனி என்னுடைய எல்லாம் உங்களுடையது தான். அத்தகைய ஆளை நீங்கள் தூக்கி பிடிக்க வேண்டும். ஓட்டுக்கு காசு வாங்குவதை நிறுத்தினால் ஏழ்மை ஒழியும்.
நீங்கள் சக அரசியல்வாதிகள் என நினைப்பவர்கள் வியாபாரிகள். அவர்களை பார்த்து ஆசைப்படாதீர்கள். இந்த அரசியல் என்பதே வேறு. ஏற்கனவே மக்களிடம் பெற்றதற்காக வட்டியை நான் செலுத்துகிறேன் என நினைத்தால் தான் இந்த அரசியலுக்கு வர முடியும். கொள்ளைக்கூட்டத்தில் நாமும் தீப்பந்தம் பிடித்து சொல்வோம் என நினைக்காதீர்கள், இதை மாற்ற வந்தவர்கள் நாம். கட்சி எல்லாம் இரண்டாவது தான், தேசம் தான் முதலில் முக்கியம்” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.