புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதனால் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள் எனவும் போலியான தகவல்கள் வெளியாகி பரபரப்பானது. இதனால், வடமாநில தொழிலாளர்கள் சிலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், துரிதமாக செயல்பட்ட காவல்துறை வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததோடு, போலி செய்திகளை பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவும் செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையில் தொழிலாளர்கள் அச்சத்தில் இருப்பதாக கூறி அவரவர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலாளர் தரப்பிலோ, தாங்கள் ஹோலி பண்டிகை கொண்டாடவே செல்வதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , வடமாநில தொழிலாளர்கள் யாரும் அச்சப்படவேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். எனவே வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவியும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல், இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, போலியான தகவல்களை பரப்பி வருவதாக பீகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கு மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பீகார் மாநில ட்விட்டர் கணக்கை முடக்க கோரி ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஜேம்ஸ் லிசா