கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியா தலைநகரான பியோயாங்கில் மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வடகொரிய அரசாங்கம் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த நோட்டீஸில் கோவிட் 19 தொற்று என்று எங்கும் குறிப்பிடவில்லை. மேலும், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அனைவரும் வீட்டிலேயேய் உடல் வெப்பநிலையை அடிக்கடி பரிசோதித்து கொண்டு அதை தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்து வருகிற நிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தற்போது வடகொரிய தலைநகர் பியோயாங் நகரில் காய்ச்சல், மூச்சுதிணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 5 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகொரியாவின் மற்ற பகுதிகளிலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







