மாட்டுப் பொங்கல் நாளான இன்று சென்னை காசிமேட்டில் மீன்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாட்டுப் பொங்கல் விழாவான இன்று மீன்கள் உள்ளிட்ட அசைவ உணவுகளை பொதுமக்கள் சாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். இதனால் இன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கு அதிகாலை முதலே பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் குவிந்தனர்.
இதனால் திங்கட்கிழமையில் வெறிச்சோடி காணப்படும் காசிமேடு மீன்பிடி ஏலக்கூடம் இன்று வழக்கத்துக்கு மாறாக அசைவப்பிரியர்களின் கூட்டத்தால் ஞாயிற்று கிழமைபோல காட்சியளித்தது. இதனால் மீன்களும் அதிக விலைக்கு விற்பனையாகின. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ஆயிரத்து 500 ரூபாய்க்கும், சங்கரா மீன் 700 ரூபாய்க்கும் விற்பனையானதால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகை மாவட்டம், கோடியக்கரை கடற்கரையிலும் மீன்களை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன்களின் விலை இரு மடங்காக உயர்ந்தது. எனினும் பொதுமக்கள் விலையைப் பொருட்படுத்தாமல் காலா, ஷீலா, திருக்கை, வாலை போன்ற மீன்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனர். பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தனர்.







