கைம்பெண் நலவாரியத்தில் புதிதாக பொறுப்பேற்ற அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் அலுவல் சாரா உறுப்பினர்கள் பதவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு பெறப்பட்டன. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
https://twitter.com/CMOTamilnadu/status/1646436521967489026
இந்நிலையில் அலுவல் சாரா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று முதல் பணியில் இணைந்துள்ளனர். இதையடுத்து கைம்பெண் நலவாரியத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் அலுவல்சாரா உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







