ஆவின் பாக்கெட்டுகளில் இந்தியில் ’தாஹி’ என எழுத தேவையில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் இருந்தால் போதுமானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனிடையே, ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என எழுதக் கூடாது என்றும், தாஹி என்று இந்தியில் எழுத வேண்டும் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதையும் படியுங்கள் : நல்லது செய்ய வேண்டும் என்றால் அதற்கு கூட ஒரு கெட்ட முகம் தேவைப்படுகிறது – பத்து தல விமர்சனம்
இதற்கு தமிழ்நாடு அரசும் கண்டனம் தெரிவித்திருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனக் குரலை எழுப்பி, உணவுப் பாதுகாப்பு ஆணையம் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தாஹி என்று குறிப்பிட வேண்டும் என்ற இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் பெயர் எழுத தேவையில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் இருந்தால் போதுமானது என்றும் மத்திய அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.







