சசிகலா சென்ற காரில் அதிமுகவின் கொடி பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். ஆனால், கடந்த வாரம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தேறிய நிலையில் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, மருத்துவமனை முன்பு அமமுக தொண்டர்கள் குவிந்தனர், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த நிலையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக வெளியே வந்தார். அவருடைய காரில் அதிமுகவின் கறுப்பு, சிவப்பு மற்றும் அண்ணா படம் பொறித்த கொடி இடம்பெற்றிருந்தது.
சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என அதிமுக தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்படும் நிலையில், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியது.
இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார். இது சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறினார். கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலா மீது நடவடிக்கை மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அதனை தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார் ஜெயக்குமார்.







