நம்பிக்கையில்லா தீர்மானம் : விவாதத்தை முன்கூட்டியே நடத்த வேண்டும் – எதிர்கட்சிகள் திட்டவட்டம்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இறுதி நாட்களில் விவாதம் நடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் முன்கூட்டியே நடத்த வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய…

மணிப்பூர் வன்முறை தொடர்பாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இறுதி நாட்களில் விவாதம் நடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் முன்கூட்டியே நடத்த வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக புதன்கிழமை மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலுல்கள் குறித்து விவாதம் நடத்த இயலாமல் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து  முடங்கி வருகிறது.

இதற்கிடையே மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 10 நாள்களில் பட்டியலிடப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் இது குறித்த விதாதம் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெறும் எனவும், ஆகஸ்டு 10ம் தேதி பிரதமர் பதில் அளிக்க உள்ளதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கையில்லா தீர்மானத்தின்  மீது விவாதம் நடத்தவும் , பதில் அளிக்கவும் கூட்டத் தொடரின் கடைசி நாட்களில் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களின் மீதான விவாதத்தில் பங்கெடுக்குமாறு எதிர்கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு எதிர்கட்சி மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முன்கூட்டியே விவாதத்தை நடத்த வேண்டும் எனவும் தாமதிக்கக் கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.