நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனவும், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என விரைவில் அறிவிப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சிறுபான்மையினர் உட்பட 3000 பேர் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது,
“தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால் தொண்டரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சாதாரண தொண்டன் பொதுச் செயலாளராக இருப்பது அதிமுகவில் தான். மயிலாடுதுறை மாவட்டத்தை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவித்தது. சீர்காழியை வருவாய் கோட்டமாக அமைத்ததும் அதிமுக அரசு தான். ஏழை எளிய மக்களின் கல்வியை கருத்தில் கொண்டு சீர்காழியில் அரசு கலைக்கல்லூரி கொடுத்ததும் அதிமுக தான்.
இன்றைய திமுகவின் நிலை என்ன ஜூன் மாதம் முதலமைச்சர் தண்ணீரை திறந்து விட்டார். நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை கர்நாடகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலினால் பெற முடியவில்லை. தண்ணீர் வராத காரணத்தினால் இரண்டு மாதங்களில் தண்ணீர் இல்லாமல் போனது. இதனால் டெல்டா மாவட்டம் முழுவதும் குறுவை பயிர்கள் காய்ந்து கருகி பாதிக்கப்பட்டது.
திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடி காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி காய்ந்து பாதிக்கப்பட்டது. ஒரு ஹெக்டருக்கு 84 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரான கட்சி திமுக.மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அதனை மாநில அரசும் கண்டுகொள்ளாமல் கைவிட்டு விட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழை எளிய மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக அதிமுக அரசால் வழங்கப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியது தான் திமுக அரசின் சாதனை. ஏழை எளிய மக்களின் நலன் கருதி கிராமப்புறங்களில் அம்மா மினி கிளினிக் ஆரம்பித்து சிகிச்சை பெறும் முறையை கொண்டு வந்தோம். அதையும் திமுக அரசு மூடிவிட்டது. ஏழைகளுக்கு சிகிச்சை செய்வதையும் தடுத்து சாதனையும் இவர்களையே சேரும்.
திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஊர் ஊராக பேசினார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து தான் என தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என்ன செய்தார். இன்றும் பல்வேறு கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். நீட் தேர்விற்கு ரத்து செய்வதற்கான ரகசியம் உள்ளது என கூறி வருகிறார். அதன் ரகசியம் என்ன என்று இதுவரை கூறவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வதற்காக இளைஞர்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசு தலைவரிடம் கொடுப்பதாக தெரிவித்தனர். அவை பயனற்று குப்பைத்தொட்டியில் கிடக்கிறது.
ஏழை மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ கல்வியில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசுதான் .மேலும் ஏழை மாணவர்களின் நலன் கருதி அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அதிமுக அரசு செலுத்தும் என்பதை உருவாக்கினோம். இதன் காரணமாக ஏழை மாணவர்களால் மருத்துவராக முடிந்தது ஆனால் இன்று திமுக மக்களை ஏமாற்றி வருகிறது
டெல்டா விவசாயிகளின் நலன் கருதி மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்கி வந்தோம் ஆனால் இவர்களது ஆட்சியில் மின்சாரம் எப்போது வருகிறது போகிறது என்று தெரியவில்லை. மூன்றாண்டு காலம் சிறுபான்மையினருக்கு கண்டுகொள்ளாத முதலமைச்சர் அதிமுக பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்தவுடன் 2019 போல சிறுபான்மையினர் மக்கள் எங்களை தேடி வருகிறார்கள். முதலமைச்சர் சிறுபான்மையினர் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளாக பேசாதவர் இப்பொழுது பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்?
ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஜனாதிபதி ஆவதற்கு ஆதரவளித்த வாக்களித்தது அதிமுக தான். ஆனால் அவருக்கு எதிராக வாக்களித்தது திமுக. இவர்களா சிறுபான்மையினருக்கு பாதுகாவலர்கள் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தது அதிமுக தான். காவிரி பிரச்னை அதிமுக அரசுதான். இன்றைய முதலமைச்சர் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவது தான் அவர்களுடைய தலையாய கடமையாக உள்ளது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டுங்கள். பதிலடி கொடுங்கள். இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என ஸ்டாலின் பேசி வருகிறார்.
ஆனால் கடன் வாங்குவதில் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தமிழகத்தில் யாருடன் கூட்டணி என விரைவில் அறிவிப்போம்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







