இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து இரட்டை சதம் அடித்து விளாசியுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. தொடர் 1 – 1 என சமனில் இருக்கும் நிலையில், ராஜ்கோட்டில் 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் முதலில் களமிறங்கிய இந்தியா 445 ரன்களை எடுத்து, ரோகித் மற்றும் ஜடேஜா சதம் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 19 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது 39 வது ஓவரில் மார்க் வுட்டின் பந்திற்கு பவுண்டரி அடித்து தனது 3வது டெஸ்ட் சத இலக்கை அடைந்தார். சுப்மன் கில்லுடன் இணைந்து சிக்ஸர், பவுண்டாரிகளாக விளாசிய ஜெய்ஸ்வால் 5 சிக்ஸர், 9 பவுண்டரி அடித்து, 104 ரன்கள் எடுத்து சதமடித்தார்.
https://twitter.com/JioCinema/status/1759128743795167233
இதனையடுத்து ரிட்டயர் ஹட் செய்துவிட்டு ஜெய்ஸ்வால் சென்ற நிலையில், இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் 196 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன் வாயிலாக இங்கிலாந்தைவிட 322 ரன்கள் இந்திய அணி முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 91 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால், சர்பராஸ் இணை அதிரடியாக ஆடியது.
இதில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.







