அதிமுகவுடன் கூட்டணி வைக்க எந்த வாய்ப்பும் இல்லை என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
விழுப்புரம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஒருங்கிணைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்தில் அவர் பேசியதாவது;
ஆர் கே நகர் தொகுதியில் மாபெரும் வெற்றியை அமமுக பெற்றது. அதுபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் உழைத்து வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவிலிருந்து விலகி என்னுடன் வந்தவர்கள் சிலர் மீண்டும் அமமுகவிலிருந்து விலகி சென்றாலும், லட்சக்கணக்கான தொண்டர்கள் என்னுடன் இருக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவன்தான் நான். எப்படி இருந்தவர்கள் எல்லாம் இப்போ பணத்திமிறில் பேசுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆர்கே நகரில் திமுகவை டெபாசிட் இழக்க செய்தவர்கள் தான் அமமுக. இரட்டை இலையை காட்டி மக்களை ஏமாற்ற முடியாது.எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைத்தால், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது என முன்பே தெரிவித்தேன். எடப்பாடி பழனிச்சாமி, பாஜக போன்ற பல்வேறு கூட்டணி கட்சிகளையும், பணத்தையும் வைத்துக்கொண்டு வெற்றி பெற முடியவில்லை. எலி வலையானாலும் தனிவலையாக கொண்டு அமமுக கம்பீரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தினை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
பழனிச்சாமியின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் கொதித்து போய் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். குடும்பத்திற்காக உழைக்கிற கட்சி திமுக. மாற்று கட்சியை மக்கள் எதிர்பார்ப்பதால் அமமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. பழனிச்சாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி காங்கிரசிலிருந்து விலகி போட்டியிடுகின்ற நிலை ஏற்படும்.
எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. ஸ்டாலின் டெல்லியை பார்த்து பயப்படுகிறார். அம்மாவின் ஒருங்கிணைந்த தொண்டர்கள் ஒருங்கினைந்து செயல்பட வேண்டும். துரோகம் செய்தவர்களுக்கு இதில் இடமில்லை. இவ்வாறு அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.