நீலகிரியில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 2 இரவுகளில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரியில் நவம்பர் முதல் ஜனவரி வரை உறை பனி…

அடுத்த 2 இரவுகளில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரியில் நவம்பர் முதல் ஜனவரி வரை உறை பனி காலம். ஆனால் இவ்வாண்டு தொடர் மழையால் உறை பனிக்காலம் 50 நாட்களுக்குப் பின் தாமதமாக துவங்கியது. கடந்த சில நாட்களாக நீர் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் கடந்த வாரம் முழுவதும் அதிகாலை உதகை, நீலகிரி, தலைக்குந்தா, குதிரை பந்தய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைபனிப் பொழிவு காணப்பட்டது. இதனால் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் புல்வெளிகளின் மேல் பனி உறைந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்தது.

இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உறைபனியில் விளையாடி மகிழ்ந்தனர். ஆங்காங்கே பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். தலைகுந்தாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1 டிகிரி செல்சியஸ் பதிவானது. உதகையில் 5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இனி வரும் நாட்களில் மைனஸ் 0 டிகிரியை எட்டும் என எதிர் பார்க்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் அடுத்த இரண்டு இரவுகளில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.