நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கலந்துகொண்டு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்படும் நிலையில், இது தொடர்பாக மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வீட்டிலும், சமுதாயத்திலும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றி பள்ளிக், கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நியூஸ் 7 தமிழ் நிகரென கொள் என்ற இந்த கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான கீதா இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் முன்னிலையில் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நியூஸ்7 தமிழின் நிகரனெ கொள்வோம் என்ற பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அ.பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அ.பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நியூஸ்7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் “நிகரென கொள்வோம்” உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, நிகரென கொள்வோம் என்ற உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். என்.சி.சி ஆசிரியர் மாணிக்கம் உறுதிமொழி வாசிக்க 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதன்பின்னர் கையெழுத்து இயக்கத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
பாளையங்கோட்டையில் கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில்,நிகர் எனக் கொள்வோம் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பிரிட்டோ, பள்ளியின் தலைமை ஆசிரியர் கன்னிஷ் பீட்டர், உதவி தலைமை ஆசிரியர் அலெக்ஸ் தலைமையில் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெண்களை சமூகத்தில் சமமாக நடத்துவது தொடர்பாக பாலின சமத்துவ உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கன்னிஷ் பீட்டர் உறுதி மொழியை வாசிக்க ஆசிரியர்கள் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பள்ளியின் தாளாளர் பிரிட்டோ பெண்களை சமமாக மதிப்பதுடன் சமூகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து மதித்து நடக்க வேண்டும் என்றும் உறுதி மொழியை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். நியூஸ் 7 தமிழோடு பெண்கள் சமத்துவம் குறித்து நிகரெனகொள் 2023 பாலின சமத்துவ உறுதி மொழியை ஏற்றுக் கொள்வது மகிழ்ச்சி என்று மாணவர்களும், தலைமை ஆசிரியரும் தெரிவித்தனர். நியூஸ் 7 தமிழ் முன்னெடுக்கும் கையெழுத்து இயக்கத்திலும் ஆசிரியர்கள், மாணவர்கள் கையெழுத்திட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா