சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் “எண்ணித் துணிக” என்ற தலைப்பில் ஆளுநர் ரவி தமிழக பெண் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசியதாவது: அம்மா சமையல் எனும் யூடியூப் சேனல் நடத்தி வரும் மீனாட்சி, அர்ஜூனா விருது பெற்ற துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் ஆகியோர் பலருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்கள். சமுதாயத்தில் சாதித்த அனைவரும் பல இன்னல்களை கடந்தே சாதித்து உள்ளனர். சமுதாயத்தில் மகளிருக்கு வாய்ப்பளிக்காத, மகளிரை பின் தள்ளக் கூடிய எந்த ஒரு நாடும் சமுதாயமும் வளர்ந்தது இல்லை.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக மகளிர் கல்வி பயின்றுள்ளனர். அதன் பின் படிப்படியாக அவர்கள் பின் தள்ளப்பட்டு உள்ளனர். பின்பு வீட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். ஆங்கிலேயர்களிடம் விடுதலை பெற்றாலும் இந்தியா வளர வேண்டும் என்றால் மகளிர் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும், மகளிருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என நினைத்தனர். பாரதியார் இதனை உணர்ந்தே மகளிர் குறித்து தொடர்ந்து எழுதி உள்ளார். நிறைய மாநிலங்களில் அரசியல் அதிகாரத்தில் பெண்கள் உள்ளனர். ஆட்சி அதிகாரம் அமைப்பதற்கு பெண்களின் வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
2010ம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் ஆண்கள் முக்கிய பங்கு வகித்தனர். 2010ம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற தேர்தல்களில் மகளிர் வாக்குகள் முக்கிய பங்கு வகித்து உள்ளனர். குறிப்பாக தங்கள் கணவர் கூறும் கட்சிக்கு அவர்கள் வாக்கு அளிக்கவில்லை. இது போன்ற மிக பெரிய மாற்றங்கள் நடைபெற்று உள்ளது.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் இருந்தனர். உண்மையில் பெண் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளனர் எனக் காரணம் இல்லை. மகளிர் கருவாக இருக்கும் நேரத்தில் என்ன குழந்தை என கண்டறிந்து பெண்கள் என்றால் அதனை கலைத்தனர். அப்படி பிறந்தாலும் அவர்கள் கொல்லப்பட்டனர். இன்று ஆண்களை விட மகளிர் அதிகமாக உள்ளனர். தமிழகத்தில் தற்போது மகளிர் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
கல்வியில் ஆண்களை விட இன்று பெண்கள் சிறப்பாக பயில்கின்றனர், பட்டங்கள் அதிகமாக பெறுகின்றனர். அதேபோல அதிக மதிப்பெண்கள் பெறுவதும் அவர்களாக உள்ளனர். உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உலக அளவில் மிக பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு இருந்தாலும் இந்தியாவில் பொருளாதாரம் வளர்கிறது.உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சி அடைய இந்தியாவை நோக்கி உள்ளது,இதே சூழலில் இந்தியா பயணித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறும்.
அண்மைச் செய்தி : “நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 நாடக மாற வேண்டும், மாற வேண்டும் என கூறுவதற்கு காரணம் உலகம் பல சிக்கல்களை இன்று எதிர்கொண்டு வருகிறது. காலநிலைமாற்றம் காரணமாக பூமியின் வெப்பம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதன் காரணமாகவே நாம் எரிபொருள் பயன்படுத்துவதை தவிர்த்து உள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்க கூடிய இயந்திரங்கள் இன்று 40% பயன்படுத்தப்பட்டு வருகிறது, 2032 ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் இதில் முதல் இடம் பெறுவோம். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.








