பிறந்தது புத்தாண்டு – உலக நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்

உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு ஆக்லாந்தில் உள்ள…

உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவர் கோபுரத்தில் கவுண்ட் டவுனுடன் புத்தாண்டை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2023 புத்தாண்டு இனிதே பிறந்தது. சிட்னி நகரில் வண்ணவிளக்குகளால் துறைமுக பாலம் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

இதேபோல ஜப்பான், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. இதனையொட்டி வானுயர கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி துபாயிலுள்ள உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவில் கண்கவர் வானவேடிக்கை நடைபெற்றது.

இதேபோன்று பிரிட்டனில் ferris gaint wheel பகுதியில் கண்கவர் வாணவேடிக்கை நிகழச்சிகள் நடைபெற்றது. ஹாங்காங்கில் விக்டோரியா துறைமுகம் அருகே கூடியிருந்த மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். வானளவு உயர்ந்த கட்டடத்தில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. சிங்கப்பூரின் மரினா பே ஸ்கைலைன் பகுதியில் கூடி இருந்த மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். கண்கவர் வான வேடிக்கைகளுடன் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. டிரோன்கள் மூலம் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்தில் புத்த மடாலயத்தில் கூடிய மக்கள் வான வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். கண்கவர் விளக்கு ஒளிகளுக்கு மத்தியில் பாங்காக்கில் உள்ள சாவ் ப்ரேயா நதி வளைவின் குறுக்கே 1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு பல வண்ணங்களில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.